கொரோனா தொற்று நோயின் ஓமைக்ரானின் புதிய பிறழ் வைரசான பி.எஃப் 7 இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கோவிட் – 19 மீண்டும் கிடு கிடுவென உயர்ந்து வரும் நிலையில் ஓமைக்ரானின் பிறழ் வடிவம் எனப்படும் துணை மாறுபாடு இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. இந்த வைரஸ் குஜராத்தில் ஒருவருக்கு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பி.எஃப் 7ன் முதல் பாதிப்பு குஜராத்தின் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. ஓமைக்ரான் எனப்படும் கோவிட் 19ன் மாறுபாடு இதன் துணை மாறுபாட்டை உருவாக்கி உள்ளது. இது அதிவேகத்தில் பரவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக 20 நாட்களில் 2000 பேர் பாதிப்புக்குள்ளானதால் சீனாவில் மீண்டும் லாக்டவுன் போடப்பட்டது. ஐ.என்.எஸ். அறிக்கைப்படி ஓமைக்ரான் பி.ஏ. 5.1.7 பி.எப். 7 சீனாவில் உள்ள மங்கோலியாவின் ஒரு பகுதியில் இருந்து தோன்றியது . பின்னர் மற்ற இடங்களுக்கும் இது அதிக வேகத்தில் பரவியது. இதனால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.
எனினும் பண்டிகை காலம் நெருங்குவதை ஒட்டி மக்கள் பாதுகாப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 26,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளில் இது 0.6 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2060 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இது நேற்றை விட கிட்டத்தட்ட 400 குறைவு என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.