2024ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், கணிசமான கொள்கை மாற்றங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது. ஆனால், நடப்பு அரசாங்கத்திற்கான செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கு அரசின் நிலை சார்ந்த திட்டங்கள் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
என்னென்ன அறிவிப்புகளுக்கு வாய்ப்பு..?
* ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.8 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
* கட்டுமான பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வாய்ப்புள்ளது.
* 2 உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 97 தேஜாஸ் மார்க்-1A விமானங்களை வாங்கும் முக்கியமான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.
* தனிநபர் வரி செலுத்துவோருக்கான ஒட்டுமொத்த வரி விலக்கு வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* பெண் தொழில்முனைவோருக்கு வரிச் சலுகைகள் வழங்குவது குறித்தும், பணிபுரியும் தாய்மார்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.