சென்னையில் நடைபெற்ற திமுகவின் சமூக வலைதள தன்னார்வலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”திமுகவினர் பதிவிடும் செய்திகள் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் பாஜகவை போல் பொய்யானதாக இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். பாஜக போன்ற சமூக வைரஸை தான் நாம் எதிர்த்து வருவதாக கூறினார்.
வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் மூலம் பாஜக பரப்பும் வதந்திகளை நம்ப ஒரு கூட்டம் இருப்பதாகவும் விமர்சித்தார். பாஜகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல என்றும் நாணயமில்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது தான் என்றும் முதல்வர் தெரிவித்தார். திராவிட இயக்கம் என்பது தமிழர்களை தலை நிமிர வைக்கும் இயக்கம் என்றும் யாருடைய தலையையும் எடுக்க பிறந்த இயக்கம் அல்ல என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எனது மனைவி துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு போவது அவரின் விருப்பம் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் தான் அவர்கள் செல்கிறார்கள் என்று கூறிய முதல்வர், அது அவரின் விருப்பம், நான் தடுக்கவில்லை, தடுக்கவும் தேவையில்லை என்றார். மேலும், கோயிலும் பக்தியும் அவரவர் விருப்பம், அவரவர் உரிமை என்று துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வது தொடர்பான பாஜகவின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்தார்.