பிரேசில் நாட்டில் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கல்லறை தோட்டம் அருகே கல்லறைக்குள் இருந்து பெண்ணின் அழுகுரல் மற்றும் முனங்கல் சத்தம் கேட்டுள்ளது. அங்கிருப்பவர்கள் முதலில் இதை கற்பனை என கருதிய நிலையில், தொடர்ந்து அந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பின்னர், இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், கல்லறைக்குள் இருந்து பெண்ணின் குரல் கேட்பதை உறுதி செய்து கல்லறையை உடைத்து பார்த்தனர். அதில், மோசமான உடல் நிலை பாதிப்புடன் இருந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர். மூச்சி விட கடினமாக நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, முகமூடியணிந்த இருவர் தன்னை கல்லறை பகுதிக்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் கடுமையாக தாக்கி, கல்லறைக்குள் வைத்து மூடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் விசாரணையில் இந்த பெண் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர் என்றும், அந்த கும்பல் கொடுக்கும் போதை மருந்தை இவர் பாதுகாத்து வந்ததாகவும், பின்னர் இவர் அந்த கும்பலை ஏமாற்ற முயன்றதால், அவர்கள் இவரை தாக்கி உயிரோடு கல்லறைக்குள் தள்ளியதாகவும் கூறியுள்ளனர்.
சுமார் 36 வயதுடைய அந்த பெண்ணுக்கு தலையில் கடுமையாக காயம் இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு குணமானதும் இது தொடர்பாக அவ ர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.