டெல்லி மாநிலம் ஜாஜாரில் உள்ள சுர்ஹெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தீப். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாணவி அஞ்சலியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சந்தீப் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், அஞ்சலியின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து, இருவரும் செக்டார் 102 இல் உள்ள பிளாட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ”காவல்துறையை தொடர்பு கொண்ட சந்தீப், அஞ்சலியை காணவில்லை என்று தகவல் தெரிவித்தார். சந்தீப்-அஞ்சலி தங்கியிருந்த பிளாட்டில் அஞ்சலியின் சகோதரர் குணால் மற்றும் அவரது மனைவி தங்கியிருந்துள்ளனர். வியாழக்கிழமை, சந்தீப் தனது சகோதரியின் வீட்டிற்கு திருவிழாவுக்காக சென்றுவிட்டார். குணாலின் மனைவி வேலைக்குச் சென்றிருந்தபோது, அஞ்சலி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதாக குணால் தனது பெற்றோருக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அஞ்சலியின் பெற்றோர், குல்தீப் (44) மற்றும் ரிங்கி (42) அந்த பிளாட்டுக்கு சென்றனர். குணாலும் அங்கு வந்தார். இருவரும் அஞ்சலியை பிடித்து வைத்திருந்த போது குல்தீப் அஞ்சலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், பிரேத பரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணையைத் தவிர்ப்பதற்காக ஜஜ்ஜரில் உள்ள அவர்களது கிராமத்துக்கு அஞ்சலியின் உடலை எடுத்துச் சென்று அங்கு எரித்துள்ளனர்” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தங்களின் சம்மதம் இல்லாமல் மகள், வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால் குல்தீப்பும் ரிங்கியும் அதிருப்தி அடைந்துள்ளார். காலை 11 மணி முதல் 12 மணிக்குள் பிளாட்டுக்கு சென்ற பெற்றோர், அஞ்சலியைக் கொன்றுவிட்டு, உடலை காரில் எடுத்துச் சென்று கிராமத்தில் எரித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குணாலின் மனைவியின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.