இந்திய மக்கள் அனைவரும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கடைசி தேதியையும் மத்திய அரசு நீட்டித்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை இலவசமாக இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஆதார் மற்றும் பான் இணைப்புக்கு 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டது. பின்னர் ஜூலை மாதம் முதல் ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தற்போதைய கால அவகாசமும் முடிந்துவிட்டால் அபராத தொகை மேலும் உயரும் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்புக்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.