ஆவின் பால் விலை மேலும் உயர்ந்துள்ளதால், டீ மற்றும் காஃபி ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சமீபகாலமாகவே, ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒருமுறை விளக்கம் அளித்திருந்தார். அதில், “பால் கொள்முதல் குறைந்திருப்பதும், போதிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம். ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது. அனைத்து மாவட்டங்களிலும் சரியான நேரத்தில் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், 5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.210-க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று 10 ரூபாய் உயர்ந்து ரூ. 220-க்கு விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வால், டீக்கடை, உணவகங்களில் டீ மற்றும் காஃபி ஆகியவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விலையேற்றம் காரணமாக டீக்கடை மற்றும் உணவகங்களில் டீ மற்றும் காஃபியின் விலை 2 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. மேலும், பிங்க் நிறத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.