மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் தடைபட்ட, அரசுப் பள்ளிகளின் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம், நிலைமை சீரடைந்த பிறகும் இன்று வரை மீண்டும் தொடங்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. 2020-21, 2021-22 ஆம் ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நடப்பாண்டில் மேலும் ஐந்தரை லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான ஆயத்தப் பணிகள் கூட நடப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய கல்விச் சூழலில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மிகவும் அவசியம். ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால் அதை விலை கொடுத்து வாங்க முடியாது. மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. அத்தகைய நடவடிக்கை எதையும் தமிழக அரசு மேற்கொள்ளக் கூடாது. தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.