மணிப்பூர் மாநிலத்தில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்தது முதல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், பணிக்கு வராமல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அரசின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. எனவே, பணிக்கு வராவிட்டால் ஊதியம் வழங்கப்படாது என மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி அன்று மைத்தேயி இன மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட பேரணிக்கு குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அங்கு வன்முறை வெடித்தது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அரசு ஊழியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
அப்போது, முதல் அரசு ஊழியர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிக்கு திரும்பாமல் இருக்கின்றனர். இதற்கிடையே, மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். இதில், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவது, இயல்பு நிலையை ஏற்படுத்துவது உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.