நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் கொண்ட நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த எய்ம்ஸ் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லியில் முதல் ஜேஎன்.1 திரிபு தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
அதில், தீவிர சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள், 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு கிட்டத்தட்ட உடல் வெப்பத்துடன் காய்ச்சல் இருப்பவர்கள், கடந்த 10 நாட்களாக தொடர் இருமல் இருப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தென்கிழக்காசிய நாடுகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது. பல்வேறு உலக நாடுகளில் குளிா்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்தத் திரிபு காரணமாக அமையலாம் என்று அஞ்சப்படுகிறது. இது உலக அளவில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.