புதிய வகை வைரஸ் காய்ச்சலால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும் தற்போது இன்புளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த வகை வைரஸ் காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வைரஸ் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினந்தோறும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். உள்நோயாளிகள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மட்டும் புற நோயாளிகள் பிரிவில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என 250 பேரும், உள் நோயாளிகள் பிரிவில் 250 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த படி உள்ளது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் நோயாளிகள் நிரம்பிய நிலை காணப்படுகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.