சிக்கபல்லாபுராவில் தாறுமாறாக வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதி சாலை ஓரத்தில் உள்ள ஓட்டல் காவலாளி மீதும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுராவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரேசந்திரா காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதியில் தாறுமாறாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் எதிரே கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. கார்மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார். இதனால், அங்கு அதே தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த பைக் மீது மோதியது. நிற்காமல் சென்ற வாகனம் பிரணவ் என்ற ஓட்டல் முன்பு பணியில் இருந்த காவலாளி மீது வேகமாக மோதிவிட்டு சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. அப்போது அங்கு நின்றிருந்த கர்ப்பிணி ஒருவரும் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்தில் பைக்கில் வந்த நபர் மற்றும் ஓட்டல் காவலாளி நாரயணசாமி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கர்ப்பிணி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது கரு கலைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைத்துள்ளது. இந்த பெரும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.