தூத்துக்குடியில், குளோபல் உலக சாதனைக்காக ஒழுக்கம் குறித்த திருக்குறளைக் கூறியபடி தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே ஒழுக்கம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையை ஊக்குவிக்கும் வகையில் குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி வேலவன் வித்தியாலயா பள்ளியில் நடத்தப்பட்டது. இதில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 270 மாணவ மாணவியர் , 10க்கும் மேற்பட்ட சிலம்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் மாணவர்களிடையே ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் ’ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’என்ற திருக்குறளைக் கூறியபடி தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பத்தைச் சுற்றி மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
இந்த சாதனையை குளோபல் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்துள்ளது.தூத்துக்குடியைப் போன்று இலங்கையிலும் 80 பேர் இந்த சாதனையில் ஈடுபட்டனர். சாதனை படைத்த மாணவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதேபோன்று சாதனைகள் வரும் 19ஆம் தேதி மதுரை, மும்பை, சுவிசர்லாந்து, உள்ளிட்ட இடங்களிலும், 26ம் தேதி சென்னை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பகுதிகளிலும் திருக்குறளை மேற்கோள் காட்டி 133 அதிகாரம் 1330 குறள்களைப் போன்று மொத்தமாக 133 ஆசிரியர்களும் 1330 மாணவர்களும் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்கின்றனர். இந்த சாதனை நிகழ்வை குளோபல் உலக சாதனை நிறுவனம் சார்பில் நடத்தப்படுகிறது.