திமுக அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது.
தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த திமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக பொன்முடி மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் அதிமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இதில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் முகாந்திரம் இல்லை என பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவிப்பதாக வழக்கை விசாரித்த நீதிபதி வசந்த லீலா கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தார்.
இந்நிலையில், வேலூர் மாவட்ட நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விசாரணை கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெஙகடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் குற்ற விசாரணை நடைமுறையைத் திரிக்கும்வகையில் சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், வேலூருக்கு மாற்றியது, தீர்ப்பு உள்ளிட்டவை சட்டவிரோதமானது என்பதால், சட்டத்தின் பார்வையில் செல்லாது என்பதால், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி நடந்திருப்பதால், இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும் நீதிபதி கூறியிருந்தார்.
அமைச்சர் பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி, வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு நிர்வாக உத்தரவின் மூலமா மாற்றப்பட்டுள்ளதால் அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார். அந்த மேலும் தங்களுடைய உத்தரவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது போல் உள்ளது என்றும் சுட்டிக் காட்டினார். மேலும் அவர், “இந்த வழக்கில் இருந்து நீங்கள் விலக வேண்டுமென கூறவில்லை.
அதே நேரத்தில் சட்டப்படி தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்துத் தான் யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார். இதற்கிடையே அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து இன்று அறிவிப்பதாக நீதிபதி வெங்டேஷ் அறிவித்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் அமைச்சர் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது.