ஓபிஎஸ் சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான விமர்சனம். மேலும் வழக்கை செப்டம்பர் மாதம் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தன்மீதான ஊழல் வழக்கை, மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ். பின்னர் வழக்கு சிவகங்கையிலுள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
2012-ம் ஆண்டு தமிழக சபாநாயகர் தனபால், ஓ.பி.எஸ் மீது வழக்கு போடுவதற்காக ஏற்கெனவே சட்டமன்றம் கொடுத்திருந்த அனுமதியை திரும்பப் பெற்றார். அதைத் தொடர்ந்து குற்றங்களை நிரூபிக்கும் விதமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்திருக்கிறார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான வழக்குகளில் ஆட்சியாளர்கள் யார் வருகிறார்களோ அவர்களுக்கு ஏற்ப பச்சோந்தி போல் லஞ்ச ஒழிப்புத்துறை மாறிக்கொண்டே இருக்கிறது என்று கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை யாருக்கு சாதகம் இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றும், அவ்வாறு செயல்பட்டால் தான் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை உருவாக்கியதின் நோக்கமும், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கபட்டதன் நோக்கமும் நிறைவேறும் என்று தெரிவித்தார். முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் காவல் துறையாக இருந்தாலும், லஞ்ச ஒழிப்புத்துறையாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டம் பொருந்தாது என்று அறிவித்துவிடலாமே என்ற கருத்தையும் நீதிபதி பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவையும் நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார். அதிகார வரம்பில்லாத ஒரு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றியது தவறு என்றும் விமர்சனம். அதன் அடிப்படையில் ஓபிஎஸ் விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்வதில் எவ்வித தவறும் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட வழக்கில் யார் தண்டிக்கப்படுகிறாரோ, யார் விடுவிக்கப்படுகிறார் என்பதை கண்காணிப்பது இந்த நீதிமன்றத்தின் நோக்கமோ, அல்லது தானாக முன்வந்து எடுக்கப்படும் இந்த மறு ஆய்வின் நோக்கமோ கிடையாது.
அதே சமயத்தில் உச்சநீதிமன்றத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள், நீதித்துறை நடவடிக்கைகளை சிதைத்துவிடக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதின் நோக்கம் முறையாக செயல் பட வேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் ஆராய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசரணையை செப்டம்பர் மாதம் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் தள்ளி வைத்துள்ளார்.