ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தன்வசப்படுத்தியது முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். முதலில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் தடை விதித்தனர். அடுத்ததாக பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் பெண்கள் வேலை செய்யவும், பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச நாடுகள் தாலிபன்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தாலும், அதனை அவர்கள் கண்டு கொள்வதில்லை.
இந்நிலையில், இதுகுறித்து நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், ”ஆப்கானிஸ்தானில் பெண்களால் நடத்தப்படும் அழகு நிலையங்களுக்குத் தாலிபன் அரசு தடை விதிக்கிறது. தாலிபன் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி, பெண்கள் அழகு நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் ஏராளமான பெண்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒப்பனை கலைஞர் ஒருவர், “ஆண்கள் வேலை இல்லாமல் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாத சூழலில் இருக்கும்போது, பெண்கள் உணவுக்காக அழகு நிலையங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இப்போது அழகு நிலையங்கள் தடை செய்யப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆண்களுக்கு வேலை இருந்தால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டோம். இப்பொழுது நாங்கள் என்ன செய்ய முடியும், பட்டினி கிடக்க வேண்டும், சாக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.