பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
அண்மை காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பட்டாசு கடைகளிலும், ஆலைகளில் திடீர் தீ விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அந்த வகையில், கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில், பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு, 15 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், விரைவாகவும் பாதுகாப்பு இன்றியும் பட்டாசு தயாரிக்கின்றனர். சமீபகால உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாநில மற்றும் மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் பட்டாசு உறுப்பத்திக்கு தடை விதிக்கப்படும் என்றும், ஆலைகள் மூடப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.