குழந்தையும் தெய்வமும், வல்லவன் ஒருவன், இரு வல்லவர்கள், கருந்தேள் கண்ணாயிரம், சி.ஐ.டி.சங்கர், பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு போன்ற படங்களில் நடித்து இன்றளவும் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்ற புகழை பெற்றவர் இவர்.
இதற்கு முக்கிய காரணம், இவர் பெரும்பாலும் துப்பறியும் கதாபாத்திரம், சண்டை காட்சிகள், காவலர் போன்ற கதாபாத்திரங்களில் தான் நடிப்பார். அதே சமயம், இவர் முரட்டுக்காளை என்னும் படத்தில் வில்லனாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தார்.

என்ன தான் பிரபலமான நடிகராக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவருடைய திரைப்படங்களை தாண்டியும் ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய உதவும் குணத்தால் அதிகமாக பரீட்சையமானவர்தான். தான் வாழும் போதே பலருக்கும் உதவிகளை செய்து கொண்டிருந்தார். அதோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானே செலவு செய்து பல பிரபலங்கள் கூட்டிக்கொண்டு சென்று அவர்களை உதவ வைத்திருக்கிறார்.
மனதளவில் நல்ல ஒரு மனிதரான இவருக்கு, 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் விஜய் சங்கர். கண் மருத்துவரான இவர், பலருக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார். மேலும், இவர் தனது அப்பாவின் நினைவாக மருத்துவமனை ஒன்றை புதிதாக திறந்தார். மற்றொரு மகன் சஞ்சய் சங்கர். இசை என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்னும் தொடரில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.