திருமணத்திற்காக சிறிய இடைவெளி எடுத்திருந்த சின்னத்திரை நடிகை ரித்திகா மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிப்பதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் மூலம் சீரியல் ரசிகர்களிடம் அறிமுகமாகியிருந்தார் நடிகை ரித்திகா. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் ரித்திகாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் அதே விஜய் டிவியில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர் வினு என்பவரை ரித்திகா திருமணம் செய்துகொண்டார். திருமணத்தையொட்டி நடிப்புக்கு சில வாரங்கள் ஓய்வு கொடுத்திருந்தார்.
இதனால் பாக்கியலட்சுமி தொடரில் இவர் நடிக்கும் காட்சிகள் எதுவும் சமீபகாலமாக ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில் அந்த தொடரில் அமிர்தா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரித்திகாவை தேடி அவரது காதலரான எழில், அமிர்தாவின் சொந்த ஊருக்கு செல்லும் காட்சியில் ரித்திகா நடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் திருமணத்துக்குப் பிறகு நடிகை ரித்திகா மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ரித்திகாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.