டெல்லியில் போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரை கொன்று குவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (42). இவரது மனைவி தர்ஷன் சைனி (40). இவர்களுக்கு கேசவ் என்ற மகனும், ஊர்வசி (22) என்ற மகளும் உள்ளனர். 25 வயதான கேசவ் படித்து முடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு போதைக்கு அடிமையாகி ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால், அடிக்கடி அவர் வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், அவரை மறுவாழ்வு மையம் ஒன்றில் அவரது குடும்பத்தினர் சேர்த்துள்ளனர். அங்கிருந்து சில நாட்கள் முன்னர்தான் கேசவ் வீடு திரும்பியுள்ளார். ஆனாலும், மீண்டும் போதை பொருட்களை எடுத்துக் கொண்டதுடன், வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இப்படியாக நேற்று நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கேசவ் தனது தாய், தந்தை, தங்கை மற்றும் பாட்டி என 4 பேரையும் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். அவர்கள் கத்தும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததால், கேசவ் தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது, அவரை மடக்கி பிடித்தவர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலையான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி கேசவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.