சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணிக்க ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுவாகும். இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிமீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்படுகிறது.
இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவுள்ளது. ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்நிலையில், PSLV C-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யவுள்ளன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.