இந்தியாவின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், நேற்று தமிழகத்தில் 102 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால், தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.