8 வயதில் தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். பெற்ற மகளை, ஒரே மகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதும் மனைவியை அடிப்பதையும் அவர் ஆணுக்கு உரிய பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தார். 8 வயதில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த போது அப்போது எதிர்க்கும் துணிவு இல்லை. 15 வயதில் தான் அந்த துணிவு வந்தது. சின்ன வயதில் நடந்த அந்த சம்பவத்தின் பாதிப்பு வாழ்க்கை நெடுகிலும் இருப்பது தான் துயரம் என்று வெளிப்படையாக பேசியிருந்தார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு.
இந்நிலையில், குஷ்புவை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவாலும் இதே போன்ற மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரும் சிறுவயதில் தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பரபரப்பு புகாரை கூறியிருக்கிறார். டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுவாதி மாலிவால், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நான் சிறுமியாக இருந்தபோது என் தந்தை என்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். என்னை அடித்து துன்புறுத்துவார். தலைமுடியை பிடித்து சுவரில் கொடூரமாக தாக்குவார். வெளியே சென்று அவர் எப்போதெல்லாம் வீட்டுக்கு வருவாரோ அப்போது நான் பயந்து படுக்கைக்கு கீழ் சென்று ஒளிந்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.