பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் புகாரளித்துள்ளோம். பலமுறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்தி வருகிறார். பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இது தான் அதிமுகவின் நிலைப்பாடு.
கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட அண்ணாமலையால் தாண்ட முடியாது. அதிமுகவுக்குள் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை பற்றி விமர்சனம் செய்தால் கடுமையான அளவுக்கு விமர்சனங்களை சந்திக்க நேரிடும்.
அண்ணாமலையை அதிமுக தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்பார்கள். கூட்டணி தர்மத்திற்கு எதிராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். பாஜகவுடனான கூட்டணி குறித்து தேர்தலின் போது முடிவு செய்வோம். அண்ணாமலையை தேசிய தலைமை தான் இயக்குகிறது. எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்” என்றார்.