அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கினர். இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.

இந்நிலையில், பெரியகுளத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ”சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என தெரிவித்தார். இருவரும் மாறி மாறி மேல்முறையீடு செய்வதால் அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று குழப்பத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.