அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரிக்கப்படுகிறது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அத்துடன் பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாத நிலை ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். அதேநேரம், தங்களின் கருத்துக்களை கேட்காமல் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றழிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தனர். மேலும், மேல்முறையீட்டு வழக்குகள் பிற்பகல் 1.30 மணிக்கு முன் எண்ணிடப்பட்டால், நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளன.