அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது.. இதனால், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.