செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் லட்சுமி நகரில் வசிப்பவர் செந்தில் குமார் (42), இவர் காட்டாங்கொளத்தூர் வடக்கு அண்ணாதுரை விட முன்னேற்ற கழக ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். இந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி பைக்கில் அவரது மகனை வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்தில்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பொத்தேரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சென்னை ஜெ.ஜெ. நகர் பகுதியில் வசிக்கும் செந்தில்குமாரின் உறவினர் விஜயலட்சுமி (40), என்ற பெண்ணை கைது செய்தனர். அந்த பெண் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கூலிப்படையை வைத்து செந்தில்குமாரை கொலை செய்ததாக விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட விஜயலட்சுமியை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.