வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநாடு அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான முக்கிய ஆலோசனை நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் இந்த மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி பெறுவதற்காக இன்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் நேரில் நேரில் சென்று காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத்தை சந்தித்துள்ளனர்.
அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்ததாவது மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி குறித்து காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து உரையாடினோம். மாநாட்டிற்கு மிக விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதிமுக மாநாடு குறித்து தலைமை கழக நிர்வாகிகளுடன் மதுரையில் ஒரு 31 ஆம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதையே அமலாக்கத்துறை சோதனை காட்டுகிறது என்று தெரிவித்துள்ள செல்லூர் ராஜு, திமுக அமைச்சர்கள் பாகுபாடு இன்றி கலெக்சன், கரப்ஷனில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.