எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்க சசிகலா தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பூத் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் உத்திரமேரூரில் நடைபெற்றது. இதில் பேசிய வைகை செல்வன், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என ஓபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்க சசிகலா தயாராக உள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026இல் ஆட்சி அமைய வேண்டும் என சசிகலா கூறியுள்ளார். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வி.கே.சசிகலா, “2026 சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார். அந்த இலக்கை நோக்கியே நமது பயணம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இதற்காகத்தான் தொண்டர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கென்று யாரும் கிடையாது. தமிழக மக்கள்தான் எனது குடும்பம். மக்களின் உரிமைக்காக எனது குரல் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழிகொடுக்கும். உண்மை என்றும் தோற்றுப் போகாது. நம்பிக்கையுடன் இருங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.