சுதந்திர தினமான இன்று எடப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு மதுபான கடைகளில் அதிகாலை முதலே மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சுதந்திர தினத்தில் அனைத்து அரசு மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு மதுபான கடைகளில் இன்று (திங்கள்) அதிகாலை முதலே மறைமுக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எடப்பாடி நகராட்சி பகுதியில் பூலாம்பட்டி பிரதான சாலையில் அமைந்துள்ள மது கடையில் பாதி கதவு திறந்த நிலையில், தொடர்ந்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், வெள்ளரி வெள்ளி அருகே உள்ள கள்ளுக்கடை மதுபான கடையின் பின்புறம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில குடிமகன்கள் சட்டையில் தேசியக்கொடியை அணிந்து வந்து மது குடித்துச் சென்ற வேதனைக்குரிய காட்சிகளும் அங்கு அரங்கேறியுள்ளது. நாட்டின் சுதந்திர தினம் என்றும் பாராமல், அரசின் அறிவிப்பினை காற்றில் பறக்க விட்டு கூடுதல் விலைக்கு அப்பகுதியில் மதுபானம் விற்பனை நடைபெறுவதை சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
