பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மீண்டும் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரலாறு காணாத கனமழை பெய்ததால், பெங்களூரு நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், தற்போது பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில், மீண்டும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக பெங்களூருவில் தினமும் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் 60 முதல் 120 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மீண்டும் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூரு நகரின் முக்கிய பகுதிகளான ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம் கே.ஆர்.மார்க்கெட், ஜே.பி.நகர், சாந்திநகர், எம்.ஜி.ரோடு, இந்திராநகர், காட்டன்பேட்டை, விஜயநகர், பசவேஸ்வரா நகர், மைசூரு ரோடு, அக்ரஹாரா தாசரஹள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.