தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குமரிக்கடல், தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.