தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைந்து வந்த நிலையில், ஒரு சில மாவட்டங்களில் சாரல் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளை மறுதினம் வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.