கொள்முதல் குறைந்து வருவதால், தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
ஆவின் நிறுவனம் மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து, தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. சென்னையில், 13 லட்சம் லிட்டரும், பிற மாவட்டங்களில் 15 லட்சம் லிட்டர் பால் விற்கப்பட்டது. மீதமுள்ள பாலில், பால் பவுடர், நெய், வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில நாட்களாக ஆவின் பால் கொள்முதல், 30 லட்சம் லிட்டருக்கும் கீழ் குறைந்து விட்டது. வெளிமாநிலங்களில் பால் தட்டுப்பாடு நிலவுவதால், தனியார் பால் கொள்முதல் அதிகரித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு மெல்ல தலை துாக்கி உள்ளது.
இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பால் முகவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சர் நாசர் ஆய்வுக்கு பிறகும் பால் பாக்கெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதலே மக்களுக்கு ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறைந்த அளவில் பால் கொள்முதல் செய்வதே இந்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.