சென்னையில் டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது. இதை மீறி சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது. இரவு, பகலாக பல பார்களில் மறைமுகமாக மது விற்பனையும் நடந்து வருகிறது. இது தொடர்பாக அடிக்கடி டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் சோதனை நடத்தி சீல் வைத்து வருகின்றனர். இதுபோல் அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி வட்டாரங்களில் அரசு அனுமதியின்றி பார்கள் இயங்குவதாக புகார்கள் எழுந்தது.
இதையடுத்து, டாஸ்மாக் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் 95 பார்களும், செங்குன்றத் தில் 53 பார்களும், பூந்தமல்லி சுற்று வட்டாரத்தில் 66 பார்கள் உள்பட முறை கேடாக செயல்பட்ட 214 பார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை பார் உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் அரசு அனுமதியின்றி இயங்கிய 50 மது கூடங்கள் சீல் வைக்கப்பட்டன. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கூடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. மேலும், 121 மது கூடங்கள் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்த நிலையில் 104 மதுக்கூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.