அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதால் மக்களவை தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தயாராக உள்ளோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், அனைத்து விவகாரங்களிலும் தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றுவோம். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் தேர்தல் நடத்துவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின்படி செயல்படுவோம். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிக்கும் திட்டத்தை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.