பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, சுமார் 2,300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பணிக்காலம் கடந்த 31ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால், கொரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டது. இதற்கு ஒப்பந்த செவிலியர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும். மக்களை தேடி மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு ஒப்பந்த செவிலியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஏற்றார் போல பணியை வழங்கும்” என்று கூறினார்.