26/11 தாக்குதல் போன்று மீண்டும் மும்பையில் தாக்குதல் நடக்கும் என்று மிரட்டல் செய்தி வந்துள்ளது..
கடந்த 18-ம் தேதி, மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத இரண்டு சந்தேகத்திற்கிடமான படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஹரிஹரேஷ்வர் கடற்கரையில் ஒரு படகு கண்டுபிடிக்கப்பட்டது, அதில் 3 AK-47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் இருந்தது.. மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது..
இந்நிலையில் மீண்டும் 26/11 போன்ற தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் செய்தி காவல்துறைக்கு வந்துள்ளது.. மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு துறையின் வாட்ஸ்அப்பில் பாகிஸ்தானிய எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிரட்டல் செய்தி வந்த தொலைபேசி எண் பாகிஸ்தானை சேர்ந்தது என்று கூறப்படுகிறது.. மும்பையில் 6 பேர் இந்த திட்டத்தை செயல்படுத்துவார்கள் என்றும் மிரட்டல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2008-ம் ஆண்டு நவம்பர் 26 முதல் பாகிஸ்தானிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மும்பை முழுவதும் தாக்குதல்களை நடத்தினர்.. 4 நாட்களில் மும்பை முழுவதும் 12 ஒருங்கிணைந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தினர். இது 26/11 தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது.. இந்நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற தாக்குதல் நடைபெறும் என்று மிரட்டல் வந்துள்ளது.. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்..