ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் ஜன சேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ பிரம்மாண்ட பேரணி சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
ஆந்திராவில் பாஜக 6 தொகுதிகள், தெலுங்கு தேசம் 17 தொகுதிகள், ஜன சேனா கட்சி 2 தொகுதிகளில் களம் காண்கிறது. இதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 10 தொகுதிகள், தெலுங்கு தேசம் 144 தொகுதிகள், ஜன சேனா 21 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் பிதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாளத்துடன் அவர் பிரம்மாண்ட ஊர்வலமாக சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. பவன் கல்யாண் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பீமவரம், கஜுவகா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே அவர் தோல்வியடைந்தார். இந்த முறை பிதாபுரம் தொகுதியில் போட்டியிடும் அவரை, வெற்றி பெற வைக்கும் பொறுப்பை, உள்ளூர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான எஸ்.வி.எஸ்.என். வர்மா ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மெகா பேரணி ஏற்பாடும் அவருடையதுதான் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read More : 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சென்னை விமான நிலையத்தில் வேலை..!!