இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசின் என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்துள்ளார். அவர் மட்டுமின்றி, மேலும் பலரையும் அந்தப் பெண் சேர்த்துவிட்டுள்ளார். அந்த வகையில், சுமார் ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சீட்டு கட்டி உள்ளாராம். இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனத்தினர் இளம்பெண் சேர்த்து விட்ட நபர்களுக்கு ரூ.40 லட்சம் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை கேட்டபோது, அவர்கள் தரவில்லை.
இதையடுத்து, இளம்பெண் பணத்தை அல்தாப் தாசினிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். அவர் வேலூர் வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி, அந்த பெண் தனது தாயாருடன் நவம்பர் 3ஆம் தேதி வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வந்துள்ளார். பின்னர், அருகே உள்ள தங்கும் விடுதிக்கு வருமாறு அல்தாப் தாசின் கூறியுள்ளார். இதை நம்பி தாயும், மகளும் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்த கிரிஜா, புவனா, தேவி மற்றும் ராஜ்குமார், மகேஷ் ஆகியோர் கொண்ட கும்பல் சேர்ந்து பணத்தை கொடுக்க முடியாது என்றும், பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் இளம்பெண்ணையும், தாயையும் மிரட்டியுள்ளனர். மேலும், இளம் பெண்ணின் தாயை ஒருவர் வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்ற நிலையில், இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இதை வீடியோவாகவும் அவர்கள் எடுத்து வைத்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண், கடந்த மாதம் வேலூர் மாவட்ட எஸ்.பி. மதிவாணனிடம் புகாரளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் மற்றும் கிரிஜா, தேவி, புவனா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.