அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் அனுமதி இன்றி, முதுகலை பொறியியல் படிப்பில் பணியில் இருக்கும் முழுநேர ஊழியர்களை கல்லூரிகள் சேர்ப்பதாகவும், அவ்வாறான கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 520-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆறு அரசுக் கல்லூரிகளும், மூன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 511 தன்நிதி கல்லூரிகளும் 4 பல்கலைப் பிரிவுகளும் உள்ளன. இந்த நிலையில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கல்லூரியின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் அனுமதி இன்றி, முதுகலை பொறியியல் படிப்பில் பணியில் இருக்கும் ஊழியர்கள் எம்.டெக் மற்றும் என்ஜினீயரிங் படிப்பதாக பல்கலைக்கழகத்துக்கு புகார்கள் வந்தன. கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து அதிகளவில் இதுபோன்று ஊழியர்களை சேர்ப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பொறியியல் படிப்பில் பணியில் இருக்கும் முழுநேர ஊழியர்களை போலியாக சேர்த்து வருகை பதிவு செய்யப்பட்டிருக்கும் கல்லூரிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், மோசடி நடந்தது தெரிய வந்தால் அந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.