மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் உடனடியாக விண்ணப்பிக்கும்படி தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக 2023-2024-ம் நிதியாண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2000, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.6000, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.8000, இளநிலை பட்டப்படிப்பிற்கு ரூ.12000 மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கு ரூ.14000 வழங்கபட்டு வருகிறது. மேலும் பார்வையற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஐடிஐ மற்றும் டிப்ளமோ-விற்கு ரூ.3000, இளநிலை படிப்பிற்கு ரூ.5000 மற்றும் முதுநிலை படிப்பிற்கு ரூ. 6000 வழங்கபட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் தங்களுடைய அடையாள அட்டை (அனைத்துப் பக்கங்களும் மருத்துவ சான்றுடன்), குடும்ப அட்டை, சென்ற ஆண்டின் மதிப்பெண் சான்று, கல்வி சான்று, வங்கி புத்தகநகல் ஆகியவற்றுடன் இணையதளத்தில் விண்ணப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்நிலையில், தற்போது அரசின் இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.