தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னதாக, ரூ.1,000 தொகை அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகை 2000 முதல் 5000 ரூபாய் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகை வழங்க நாளை முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம், தேதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள் 14ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.