கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. உயிர் அச்சத்தால் பொதுமக்கள் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்திருந்தனர். தற்போது தான் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பிவரும் நிலையில், மீண்டும் ஒரு கொடிய வைரஸ் மத்திய ஆப்பிரிக்காவில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரசின் பெயர் மார்பர்க். ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 9 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த மத்திய ஆப்பிரிக்கா நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அத்துடன் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவும், இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கவும் பரிசீலித்து வருகிறது.
இந்த வைரஸால் தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் உடல்நலம் மோசமடைவது போன்ற பாதிப்புக்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு 7 நாட்களில் கடுமையான ரத்த கசிவு அறிகுறிகளும் ஏற்படலாம். இது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நோய் பாதித்த மாவட்டங்களில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அறிகுறிகள் இருப்பவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆப்பிரிக்காவுக்கு 500 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு உபகரணங்களை உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.