சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதானால், தக்காளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமை கடைகள், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறையவில்லை. வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை விலையில் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, இன்று 10 ரூபாய் அதிகரித்து 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் தர தக்காளியான நவீன் தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் சின்னவெங்காயம் கிலோ 90 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கு முக்கிய தேவையாக தக்காளி மற்றும் வெங்காயம் உள்ளது. எனவே, தக்காளி மற்றும் சின்ன வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.