டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கோடீஸ்வர் நெவிலி ராய் சிங்கம் என்பவருக்கு சீன அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் ஊடகங்களுடன் தொடர்பு உள்ளது என்றும், நியூஸ் கிளிக் நிறுவனம் உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு நிதியளிக்கிறார் என்றும் ‘தி நியூ யார்க் டைம்ஸ்’ நாளிதழில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி செய்தி வெளியானது. ஆனால், இதற்கு நியூஸ் கிளிக் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அந்நிறுவனம் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம், 2 குழுக்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தியது, குற்றசதி என பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. சீனா தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து நியூஸ் கிளிக் நிறுவனம் ரூ.38 கோடி பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை இயக்குனரகம் கடந்த 3ஆம் தேதி நியூஸ் கிளிக் அலுவலகத்திலும், அந்நிறுவனத்துடன் தொடர்புடையவர்களின் 30 இடங்களிலும் சோதனை நடத்தியது. நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அதன் நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், நியூஸ் கிளிக் நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதன் நிறுவனர் பிரபீர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இந்த சோதனைக்கு பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.