போலி விசா வழங்கிய வழக்கில் கார்த்திக் சிதம்பரம் உட்பட அனைவரும் அடுத்த ஏப்ரல் 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மின்சாரம் மற்றும் எஃகு துறையில் புதிய உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கு ‘ப்ராஜெக்ட் விசா’ விதிமுறைகள் கடந்த 2010-ம்ஆண்டு கொண்டுவரப்பட்டன. சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களுக்கு ப்ராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுத் தர கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கர ராமன் ஆகியோரின் உதவியை வேதாந்தா குழுமத்தின் ஊழியர் ஒருவர் நாடியுள்ளார்.
இந்த ப்ராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை பெற்றுத் தந்ததற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சுமத்தியது. இது தொடர்பாக சிதம்பரம் வீட்டில் கடந்த 2022ம் ஆண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், பாஸ்கர ராமனை கைது செய்தனர்.சிபிஐ புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை நிதிமோசடி வழக்கு பதிவு செய்து சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேற்று ஆஜரானார். முன்னதாக, கடந்த டிசம்பர் 23-ம் தேதியும் கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானார்.
அப்போது, அவரது வாக்குமூலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.கார்த்தி சிதம்பரம் நிராகரித்து இருந்தார். சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று டெல்லி ரோஸ் அவின்யூ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம், அவரது உதவியாளர் எஸ்.பாஸ்கரராமன் மற்றும் ஒரு சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட 6 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அவர்கள் அனைவரும் அடுத்த ஏப்ரல் 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.