பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர்.
மாணவ – மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வெளியான தேர்வு முடிவுகளின் படி, தமிழ்நாட்டில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 மாணவிகளும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.