முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி திமுக ஆட்சி அமைந்தது. முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி வருகிற 7ஆம் தேதி இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டை தொடங்குகிறது. இத்தகைய சூழலில், நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுபோக தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக தொழில் துறையின்கீழ், 2024 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த மாத இறுதியில் வெளிநாடு செல்ல இருக்கிறார். இந்த வெளிநாட்டு பயணம் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும் விரிவாக்கம் செய்வது தொடர்பாக நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டும் இன்றி ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் பற்றி ஆலோசனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. சில துறைகளில் அமைச்சர்கள் – ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையில் சுமூக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, இதை பற்றி ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை வைக்க வாய்ப்பு உள்ளது.